February 12, 2019
தண்டோரா குழு
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் வாலிபர் பிணத்தை மீட்டு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் பாரதி நகர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து துர்நாற்றம் அடித்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.இதனயைடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது கிணற்றில் 18 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இருந்த வாலிபரின் உடலை மீட்டு,கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரனையில், இறந்துகிடந்தது குணியமுத்தூரை சேர்ந்த அப்பாஸ் என்பவரின் மகன் அசாருதீன் என்பதும், 18 வயதான இவர் கார் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில தினங்களாக மன நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வாலிபரின் உடலை மீட்ட குனியமுத்தூர் போலீசார் ,அசாருதீன் கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற பல்வேறு கோணங்களில் விசாரனை நடத்திவருகின்றனர்.