November 24, 2018
தண்டோரா குழு
கோவை காவல் துறையில் ஏழு ஆண்டுகளாக பணியில் இருந்த மோப்ப நாய் ராஜா உடல் நலக் குறைவால் உயிரிழந்தது காவல் துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு பிறந்த ராஜா டாபர்மேன் ரகத்தை சேர்ந்தது. 2010 ஆம் ஆண்டு கோவை மாநகர காவல் துறையில் மோப்ப நாயாக சேர்க்கப்பட்ட ராஜா, ஒர் ஆண்டுகள் பயிற்சி முடித்து 2011 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் பணியாற்றிய ராஜா, சுமார் 118 வழக்குகளில் பணியாற்றி உள்ளது. குறிப்பாக கடந்த 2012 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணத்திற்காக நடந்த கொலை வழக்கில் ராஜாவின் பணி முக்கியமானது என கூறும் காவல்துறையினர், வழக்கில் துப்பு கிடைப்பதற்கு காவல் துறைக்கு ராஜா உறுதுணையாக இருந்து வந்து உள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ராஜா, வயது காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கோவை காவல் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மோப்ப நாய் ராஜா உயிரிழந்தது. இதனை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மையத்திலேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.