June 28, 2020
தண்டோரா குழு
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த பெண் வங்கி ஊழியருக்கு கொரோனா உறுதியான நிலையில், சில தினங்களுக்கு அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
கோவை உக்கடம் மேம்பாலம் கட்டும்பணி நடந்து வருவதால், சி.எம்.சி காலணி பகுதியில் குடியிருந்து வரும் மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் இரண்டு இடங்களில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பட்டா வழங்கும் விழா கடந்த நான்கு நாட்களுக்கு முன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுணன், மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் ஜடாவத், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடிசை மாற்று வாரிய ஊழியர் ஒருவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி பெண் ஊழியர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து பெண் ஊழியர் ஆம்புலென்ஸ் மூலம் கோவை இ.எஸ் ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவர் குடியிருந்த பகுதி சீல் வைக்கப்பட்டது. மேலும் அவரது உறவினர்கள் பகுதி மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணிகளை மாநகராட்சி தொடங்கி உள்ளது.