March 4, 2019 தண்டோரா குழு
மகா சிவராத்திரியையொட்டி கோவை ஈஷா மையம் சார்பில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.
கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வழிநடத்தலில் மகா சிவராத்திரி ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையடுத்து மகா சிவராத்திரி ஈஷாவில் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். சத்குரு ஜக்கி வாசுதேவ் அவரை நேரில் சென்று வரவேற்றதுடன், தங்கள் யோகா மையத்தின் செயல்பாடுகளை விளக்கினார்.
பிரம்மாண்ட ஆதி யோகி எனப்படும் சிவப்பெருமான் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன் லட்சக்கணக்கானோர் அமர்ந்து ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்து வருகின்றனர். தொடக்க நிகழ்ச்சியாக நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு என கூறப்படும் பஞ்ச பூதங்களை வழிபடும் நோக்கில் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சிவப்பெருமானை போற்றி சிறப்பு இசை கச்சேரி நடைபெற்றது. தொடர்ந்து நடனக்கலைஞர்கள் தங்கள் நடனத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,
ஆன்மிகம் மற்றும் நம்பிக்கை நிறைந்த பூமியாக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்டார். வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் பல்வேறு வகையான விழாக்கள் நம் நாட்டில் கொண்டாடப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திரைப்பட நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால், அதிதி ராவ், சுஹாசினி உட்பட திரை நட்சத்திரங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.