April 24, 2019
தண்டோரா குழு
பிரசித்தி பெற்ற கோவை அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவில் அக்னி சட்டி ஊர்வலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவையின் பிரச்சித்தி பெற்ற பழமையான அம்மன் ஆலயமான அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இவ்வாண்டு சித்திரை திருவிழா கடந்த வாரம் துவங்கியது. பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான அக்கினிசட்டி ஊர்வலம் இன்று நடைபெற்றது. முன்னதாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலையில் டவுன்ஹால் பகுதியிலுள்ள கோவையின் காவல் தெய்வமான அருள்மிகு கோனியம்மன் கோவிலில் திரண்டு அங்கிருந்து சக்திகரகம் மற்றும் அக்கினி சட்டி ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டனர்.
கோனியம்மன் திருக்கோவிலில் புறப்பட்ட ஊர்வலமானது டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, லிங்கப்ப செட்டி வீதி, பால் மார்க்கெட், புரூக்பாண்ட் சாலை, சோமசுந்தரம் மில் சாலை வழியாக நஞ்சப்பா சாலையை அடைந்து அங்கிருந்து அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவிலை அடைந்தது.வழி நெடுகிலும் அக்னி சட்டி ஏந்தி வந்த பெண் பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என கோஷங்கள் எழுப்பியபடியே பக்தி பரவசத்துடன் சென்று அம்மனுக்கு நேர்த்தி கடனை செலுத்தினர்.
அக்னிசட்டி ஊர்வலத்தை முன்னிட்டு மாநகரின் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதுடன் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.