October 9, 2019
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்பினால் 108 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.இதையடுத்து சுகாதாரத்துறை தனது பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலம் காய்ச்சல்கள் பரவுவதை தடுத்தது.அதேபோல காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது. இப்படி நடைபெற்ற தொடர் செயல்பாடுகளால் நோய் பாதிப்புகளும் குறைந்தது.
ஆனால் தற்போது தமிழகத்தில், தென்மேற்குப் பருவமழையை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு, வைரஸ் காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அதன்படி கோவை அரசு மருத்துவக் கல்லூரியிலும் காய்ச்சலுக்கென்றே பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.அதேபோல வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்லும் அளவில் 24 மணி நேரமும் செயல்படும் வார்டும அமைக்கப்பட்டுள்ளது.இப்படியிருக்க கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பில் 14 பேர் அனுமதிக்கபட்டுள்ளனர்.
அதேபோல காய்ச்சல் பாதிப்பில் 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் கோவையை சேர்ந்தவர்கள் 9 பேரும்,மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 5 பேரும்,குழந்தைகள் 4 பேரும்,பெரியவர்கள் 10 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படியிருக்க இன்று மட்டும் 17 பேர் கோவை அரசு மருத்துவ மனையில் காய்ச்சல் பாதிப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 16 பேர் காய்ச்சல் பாதிப்பு சரியாகி இன்று டிஸ்ட்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் மருத்துவமனையின் டீன் அசோகன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது
காய்ச்சலால் யாரேனும் பாதிக்கப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அனுக வேண்டும்.கோவை அரசு மருத்துவமனையை பொறுத்தவரை 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் தயார் நிலையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.