October 16, 2018
தண்டோரா குழு
கோவை அரசு கல்லூரி வளாகத்தில் பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடிய முதலாம் ஆண்டு மாணவி மாலதியை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
கோவை அரசு கலைக் கல்லூரியில், எம்ஏ முதலாண்டு படித்து வரும் மாணவி மாலதி. இவர் கடந்த மாதம் 28-ம் தேதி கல்லூரி மைதானத்தில் மாணவ-மாணவிகளுடன் இணைந்து அனுமதியின்றி பகக்சிங் பிறந்தநாள் கொண்டாடியுள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து, முதல்வரின் ஆணையை மீறி மாணவர்களை அழைத்து கூட்டம் நடத்தியமைக்கு உரிய விளக்கம் தருமாறும் அதுவரை அம்மாணவியை தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுவதாக முதவரின் கடிதம் தபால் மூலம் அம்மாணவிக்கு அனுப்பப்பட்டது. அக்கடிதத்தில், 22அக்டோபர் காலை 11 மணியளவில் நடைபெறும் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர்களை ஒடுக்கும் முயற்சியில் கல்லூரி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.கல்லூரி சுதந்திரம் தமிழகத்தில் குறைவாகவே இருப்பதாகவும் கல்லூரி பிரச்னையில் காவல்துறை தலையிட்டுள்ளதாகவும் மாணவி மாலதி குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே, கல்லூரி வளாகத்தில் அனுமதியின்றி பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால்தான், மாலதி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கல்லூரி முதல்வர் சித்ரா விளக்கம் அளித்துள்ளார். மேலும்,மாணவி மீதான நடவடிக்கை குறித்து, வரும் 22ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்றும், அதன் பின்னரே மாணவியை மீண்டும் கல்லூரியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் சித்ரா தெரிவித்துள்ளார்.