February 10, 2021
தண்டோரா குழு
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.1986ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்து வருகிறார்.ஆலன் திலக் கராத்தே பள்ளியில் பயிற்சியாளராக உள்ளார். ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி என்ற கராத்தே பள்ளி மூலம் 34 ஆண்டுகளாக மாணவ மாணவிகளுக்கு கராத்தே பயிற்றுவித்து வருகிறார்.
1993 முதல் 96 வரை தொடர்ந்து மூன்றாண்டுகள் தேசிய அளவிலான போட்டியில் முதலிடத்தைப் பெற்றவர். 65 மாணவர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டிகளிலும், 7 மாணவர்கள் பள்ளி அளவிலான தேசிய கராத்தே போட்டிகளிலும் கலந்துகொண்டு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்று உள்ளனர்.
இந்நிலையில், கராத்தே கலையை மாணவர்கள் மத்தியில் சிறப்பாக கொண்டு சேர்த்தமைக்காக, தமிழக அரசின் சார்பில் கராத்தே கலையில் தலைசிறந்த பயிற்சியாளருக்கான பட்டயத்தை கடந்த 8ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருதினை வழங்கி கவுரவித்தார். மேலும் இவரது சேவையை பாராட்டி கேடயம் மட்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கராத்தே கலையில் சிறந்த பயிற்சியாளர் பட்டயத்தை முதன்முதலில் கார்த்திகேயன் முதன் முறையாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.