June 1, 2020
தண்டோரா குழு
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சிப் பகுதிகளில் எதிர்வரும் 08.06.2020 முதல் திறக்கப்படவுள்ள உணவகங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., தலைமையில் உணவுப்பாதுகாப்பு
அலுவலர்கள், உணவகங்களின் உரிமையாளர்கள், மற்றும் அலுவலர்களுடன்
கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க,மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள உணவகங்கள் எதிர்வரும் 08.06.2020 முதல் திறக்கப்படவுள்ளது. அனைத்து உணவகங்களிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்தக் கூடாது.உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் கிருமிநாசினி
கொண்டு நன்றாக கைகளை சுத்தம் செய்த பிறகே உணவகத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். நான்கு நபர்கள் அமரும் வகையில் உள்ள இருக்கைகளில் இரண்டு நபர்கள் மட்டுமே அமர்ந்து உணருந்த அனுமதிக்க வேண்டும்.
மேலும், உணவகங்களில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும். உணவகங்களில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் உணவுப்பொருட்களை வைத்து மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாநகராட்சியால் வழங்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர்
திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இக்கூட்டத்தில், உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள், உணவகங்களின் உரிமையாளர்கள், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.