March 27, 2019 தண்டோரா குழு
பன்னிமடை அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை தர வலியுறுத்தியும் துடியலூர் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்த சிறுமி தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். பின்னர், விடிய விடிய குழந்தையை அனைவரும் தேடிய நிலையில், நேற்று அதிகாலை சிறுமி பிணமாக அதே பகுதியில் கிடந்தார்.
இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், சிறுமியின் பெற்றோர் குற்றவாளியை விரைவாக கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்தனர். இதற்கிடையில், மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் துடியலூர் முக்கிய சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர், இருபுறமும் சாலையை மறித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.