September 1, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் அரசு வழிகாட்டு நடைமுறைகளுடன் மீண்டும் பேருந்து சேவை தொடங்கியது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க முழுவதுமாக நிறுத்தப்பட்டது.அதன்பின் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.இதில் 8 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு மண்டலங்கள் இடையே பொதுப்போக்குவரத்து ஜூன் மாதம் முதல் துவங்கியது.
கோவை கோட்டத்தில் உள்ள கோவை திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து 50 சதவீத அரசு பேருந்துகள் ஜூன் மாதம் இயங்கியது.அதன் பின் மீண்டும் ஜூலை மாதத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொது போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது.இந்த நிலையில் இன்று முதல் மாவட்டங்களுக்குள் பேருந்து சேவையை தொடங்க வழிகாட்டு நடைமுறைகளுடன் தமிழக அரசு அனுமதியளித்தது.அதன்படி கோவையில் 50 சதவிகித பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன.தேவைக்கு ஏற்ப பேருந்துகளை கூடுதலாக இயக்கவும் கோவை அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
அரசு வழிகாட்டு நடைமுறைகளின் படி ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு முகக்கவசம், கையுறைகள்,சானிடைசர்கள் வழங்கப்பட்டுள்ளன.பேருந்துகளில் அதிகபட்சமாக மொத்த இருக்கை எண்ணிக்கையில் 60 சதவீதம் பேர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இருக்கை மற்றும் நிற்பதற்கான இடங்களில் பயணிகள் தனிநபர் இடைவெளியை உறுதி செய்யவும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல ஒவ்வொரு முறை பேருந்து இயக்கத்திற்கு பிறகு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும், மாஸ்க் அணிந்திருந்தால் மட்டுமே பேருந்தில் பயணிக்க பயணிகளை அனுமதிக்கவும், பயணிகளின் பயன்பாட்டுக்காக பேருந்தில் சனிடைசர் வைக்கவும் வழிகாட்டு நடைமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் சுங்கம், ஒண்டிபுதூர் உள்ளிட்ட பேருந்து பணிமனைகளில் இருந்து அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகள் தற்போது வரை இயக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.