February 18, 2021
தண்டோரா குழு
நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ 6 ஆயிரம் ரொக்கம் அளிப்பதாகக் கூறி வாக்கு பெற்றபின் மாயமானவர் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று புலியகுளம் பகுதியில் நடைபெற்றது.கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ரூ.72.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும், ரூ.25.80 லட்சம் மதிப்பில் அமையக்கூடிய பூங்காவிற்கான அடிக்கல் நாட்டினார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது,
இந்த பகுதியில் நீண்ட காலமாக பட்டா பிரச்சினை இருந்து வந்தது. இதனை தீர்க்க வழிவகை செய்தபோது 1 சென்ட் நிலத்திற்கு மட்டுமே வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் மூலமாக 2 சென்ட் நிலத்திற்கான பட்டா 561 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.69 கோடியே 62 லட்சம் ஆகும். மேலும், ரூ.1.2 கோடி மதிப்பில் 240 மகளிருக்கு தாலிக்கு தங்கம், 100 பேருக்கு சுயநிதி குழு மூலமாக கடன், 334 பேருக்கு ரேஷன் கார்டுகள், 75 பேருக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் ரூ.72.71 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கோவையில் மட்டும் 5 கல்லூரிகள் பெற்றுத் தந்துள்ளோம். எந்த மாவட்டத்திற்கும் இத்தனை பயன்கள் கிடைக்கவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.பொங்கல் பரிசு தொகையாக ரூ.2500, விவசாயிகளின் ரூ.12 ஆயிரத்து 110 கோடி கடன் தள்ளுபடி என
சொல்லாத நலத்திட்டங்களையும் நமது முதலமைச்சர் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார்.உங்களில் ஒருவர் என்பதால் தான் கொரோனா காலத்திலும் களத்தில் இறங்கி நோய் தொற்றை கட்டுப்படுத்தினார்.
ஸ்டாலின் போல மேக்-அப் செய்து கொண்டு அறைக்குள் அமர்ந்திருக்கவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வீட்டுக்கு வீடு ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக கூறி வாக்கு சேகரித்தனர். ஓட்டு பெற்ற பிறகு மாயமாகிவிட்டார். துணை முதலமைச்சராக இருந்த போது மக்களுக்கு எதுவுமே செய்யாதவர், இப்போது மனு வாங்கிக் கொண்டிருக்கிறார். கோவை மாவட்டத்திற்கு 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கொடுத்துள்ளோம். அதனால் தைரியமாக மக்களை சந்திக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.