March 23, 2019
கோவை ஓண்டிபுதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 43 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில் எபிக்ஸ் கேஸ் வேர்ல்டு மணி என்ற நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஜெயராம் என்ற ஊழியர், அமெரிக்கா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பணத்துடன் விமானநிலையம் சென்று கொண்டு இருந்தார்.அப்போது ஓண்டிபுதூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த பறக்கும் படை அதிகாரிகள் ஜெயராம் வாகனத்தினை சோதனையிட்ட போது அதில் அமெரிக்க நாட்டு பணம் 35000 டாலர், சிங்கப்பூர் பணம் 22000 டாலர், யூரோ கரன்ஸி 10000 யூரோ ஆகியவை இருப்பது தெரியவந்த்து.இதன் இந்திய மதிப்பு 43 லட்சத்து 44,900 ரூபாயாகும். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு வந்து ஒப்படைத்தனர். தனியார் நிறுவனத்தின் சார்பில் முறையான ஆவணங்கள் இருப்பதாக கூறி, ஜெயராம் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஆவணங்களை ஓப்படைத்தார்.எனினும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருப்பதால், பணத்தை வருமான வரித்துறையிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.