May 21, 2020
தண்டோரா குழு
14 வயது சிறுமியை பாட்டி வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவனை போக்ஸோ பிரிவின் கீழ் கோவை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவையை சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று மதியம் முதல் வீட்டிலிருந்து காணாமல்போனதை அடுத்து,இரவில் ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் அளித்த புகார் அளித்தனர்.இதன் அடிப்படையில், காணாமல்போனதாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில், சிறுமியின் பெற்றோர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சிறுமி உடன் பள்ளியில் படித்த கணபதி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தொடர்பாக விசாரணை செய்ததில், சிறுமியை சிறுவன் கரூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்றது தெரியவந்தது. உடனே, சிறுமியை மீட்ட காவல்துறையினர், காணாமல்போனதாக பதிவு செய்யப்பட்ட பிரிவை போக்ஸோ மற்றும் கடத்தல் பிரிவாக மாற்றி சிறுவனை கைது செய்து, சிறார் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் காரணமாக மாவட்டம் முழுதும் காவல்துறையினர் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், 17 வயது சிறுவன் ஓட்டுனர் உரிமம், மாவட்டங்களை கடக்க தேவையான இ.பாஸ் இல்லாமல், சிறுமியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.