September 1, 2020
தண்டோரா குழு
கோவை கிணத்துக்கடவு பகுதியைஅடுத்துள்ள நெகமம் தாளக்கரை பகுதியை சேர்ந்த கதிரவன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (26). இவர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு திருமணமாகி ஒரு வயது மூன்று மாதங்கள் ஆன யாசவி என்ற பெண் குழந்தை உள்ளது.
கதிரவன் விவசாய வேலை செய்து வருகிறார். தமிழ்ச்செல்வி கடந்த சில மாதங்களாக தைராய்டு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.மேலும், தமிழ்ச்செல்வி வயிற்றுவலியும் இருந்ததாக கூறப்படுகிறது. தமிழ்ச்செல்வி சிறு,சிறு விஷயங்களுக்கு கூட எல்லோரிடமும் சண்டைபோட்டு கோபித்துக் கொள்வார் நேற்று மதியம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனது அம்மா கனகமணிக்கு போன் செய்த தமிழ்ச்செல்வி தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், தனது குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறும் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த கனகமணி தனது குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு நெகமத்தில் உள்ள தமிழ்ச்செல்வி வீட்டிற்கு நேற்று மாலை வந்தனர்.
அப்போது, வீட்டின் உள்புறம் பூட்டப்பட்டு இருந்தது.பின்னர்,கதவை வெகுநேரம் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே பார்த்தனர்.அப்போது, தமிழ்ச் செல்வியும் குழந்தை யாசவியும் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.