July 19, 2019
தண்டோரா குழு
கோவையில் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வன வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை சிவானந்தா காலனியில் தமிழ்நாடு அரசு வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் இதர பணியாளர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலர்களாக பணியாற்றுவர்கள் பணி மூப்பு அடிப்படையில் வனப்பணியாளர்களாக பதவி உயர்வு அளித்து வந்த நிலையில், இம்முறை ரத்து செய்யப்பட்டு நேரடியாக வனப்பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுமென அரசு அறிவித்துள்ளது. இதனால் வேட்டை தடுப்பு காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நேரடியாக வனப்பணியாளர்கள் தேர்வு முறை ரத்து செய்யப்படுமெனவும் வேட்டைதடுப்பு காவலர்கள் தெரிவித்தனர்.
மேலும் 20 ஆண்டுகள் பணி புரிந்த வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் எனவும், வேட்டை தடுப்பு காவலர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். சீருடையுடன் உண்ணாவிரத போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர்.