December 27, 2018
தண்டோரா குழு
விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை சுல்தான் பேட்டை பகுதியில் குடிசையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 3 பேர் மயங்கி விழுந்தனர்.
விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் 8 இடங்களில் நூதன முறையில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை சுல்தான் பேட்டை பகுதியில் விவசாயிகள் 11 வது நாளாக கவன ஈர்ப்பு போராட்டத்திலும், 5 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குடிசைகளில் குடியேறும் போராட்டத்திக் ஈடுபட்டனர். விளைநிலங்களில் மின் கோபுரம் அமைத்தால் தாங்கள் குடிசையில் வாழும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதற்கிடையில் 5 வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயி ராஜேந்திரன் , செல்வராஜ் மற்றும் மாணிக்கம் ஆகிய மூன்று பேர் உடல் நிலை மோசமானதால் ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், விரைவில் கூட இருக்கும் சட்ட சபையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.