June 19, 2019
தண்டோரா குழு
மாணவ,மாணவிகளின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் விதமாக மாதம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ள வாசிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் கோவையில் துவங்கப்பட்டது.
குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு ஒவ்வொரு ஜூன் மாதம் 19 ந்தேதி தேசிய வாசிப்பு தினமாக அறிவித்தது. கல்வியறிவை அதிக அளவில் உயர்த்தும் நோக்கத்தில் துவங்கப்பட்ட இத்திட்டத்தின் படி கோவை மாவட்ட கல்வித் துறை மற்றும் பொது நூலகங்கள் துறை சார்பாக தேசிய வாசிப்பு தினமான இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை அரை மணி நேரம் வாசிப்பதைப் பயிற்சி செய்யும் ஒன்று படித்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் கோவையில் நடைபெற்றது.
தொடர்ந்து டவுன் ஹால் பகுதியில் உள்ள நூலகத்தில் நடைபெற்ற விழாவில், வாசிப்பு விழிப்புணர்வு வாகனத்தை விஜயா பதிப்பகம் வேலாயுதம் மற்றும் மாவட்ட மைய நூலகர் ராஜேந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்த விழிப்புணர்வு வாகனத்தில் இன்று துவங்கி ஒரு மாதம் முழுவதும் கோவையை சுற்றியுள்ள தொலைதூர கிராமங்கள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவ,மாணவிகளிடம் வாசிப்பு பழக்கம் மற்றும் வாசிப்பின் நன்மைகள. குறித்து மாணவ,மாணவிகளிடம் எடுத்து கூற உள்ளதாக இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளரும்,நூலகரும் ஆன விஜயன் தெரிவித்துள்ளார்..