June 7, 2019
தண்டோரா குழு
கோவையில் தனியார் நிறுவனத்தின் நடப்பு கணக்கிலிருந்து கடந்த ஆண்டு ஸ்கிம்மர் கருவி மூலம் திருடப்பட்ட 80 ஆயிரம் ரூபாயை வங்கி நிர்வாகம் வழங்க வலியுறுத்தி அந்நிறுவன ஊழியர்கள் வங்கியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Pro plus logics என்ற ஐடி நிறுவனம் கோவை கணபதி பகுதியில் செயல்பட்டு வருகிறது. சாய்பாபா காலனி பகுதியிலுள்ள யுனைடட் பேங்க் ஆஃப் இண்டியா வங்கியில் நடப்பு கணக்கை வைத்திருந்ததுடன் தங்கள் ஊழியர்களின் சம்பள கணக்கையும் அங்கேயே வைத்திருந்தது.கடந்த 2018 ஜூலை 20 ம் தேதி நிறுவன கரண்ட் அக்கவுண்டிலிருந்து 80 ஆயிரம் ரூபாயை ஸ்கிம்மர் கருவி மூலம் மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.
வங்கியில் இது குறித்து அப்போதே புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.மேலும் கோவை மாநகர காவல்துறையிலும் வங்கி புகார் பிரிவிலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இதுவரை எந்த பதிலும் உரிய முறையில் வங்கி தரப்பு கூறாததால் ஊழியர்கள் 15 பேருடன் வந்த தனியார் நிறுவன மேலாளர் வங்கி அலுவலகத்திற்குள்ளேயே லேப் டாப்புடன் அமர்ந்து உள்ளிருப்பு மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வங்கி நுழைவாயிலில் அமர்ந்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பரபரப்பு நிலவியது.விரைவில் களவாடப்பட்ட தங்கள் பணத்தை வங்கி நிர்வாகம் திரும்ப செலுத்தவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.