July 22, 2019
தண்டோரா குழு
கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் என கூறி கேரள வியாபாரியிடம் 13 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து காரில் தப்பி ஓடிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் தலச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் நவ்ஷாத். அவரது நண்பரான விக்னேஷ் என்பவர் கிராமுக்கு 200 ரூபாய் வீதம் குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி கோவைக்கு அழைத்து வந்துள்ளார். கோவையைச் சேர்ந்த சிவா என்ற நபர் மூலம் தங்கத்தை வாங்கலாம் என்று கூறிய அவர் நவ்ஷாத்தை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ மூலம் சிவானந்தா காலனி பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.சிவானந்தா காலனி பகுதியில் காத்திருந்த சிவா அங்கு நின்றிருந்த இன்னோவா கார் ஒன்றை காண்பித்து அதில் வியாபாரிகள் இருப்பதாக கூறவே நவ்ஷாத் மற்றும் விக்னேஷ் இருவரும் அந்த காரில் ஏறியுள்ளனர்.அப்போது காரில் இருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தாங்கள் விஜிலென்ஸ் அதிகாரிகள் எனவும் கையில் கொண்டுவந்திருந்த பணத்தை தருமாறும் கேட்டுள்ளனர். அதில் ஒருவர் காவல்துறையினரின் சீருடையில் இருந்ததால் அதனை நம்பிய நவ்சாத் தனது கையிலிருந்த பணப்பையை அவர்களிடம் கொடுத்துள்ளார். இதை அடுத்து அதே பகுதியில் சுமார் ஐந்து நிமிடம் சுற்றிய அந்த இன்னோவா காரில் வந்தவர்கள் பின்னர் நவ்சாத் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் வழியில் இறக்கி விட்டு தப்பியோடியுள்ளனர்.
அதேவேளையில் இன்னோவா காரில் இருந்தவர்களை அறிமுகப்படுத்திய சிவா என்பவரும் தலைமறைவானதால் அதிர்ச்சியடைந்த நவ்ஷாத் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் உடனடியாக தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் இரத்தினபுரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தப்பியோடிய இன்னோவா காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பலை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தப்பி ஓடிய கேரளா மாநிலம் திருச்சூரைச் சேரந்த சிவா,அஜித்,அரவிந்தன் கோவையைச் சேர்ந்த பத்மநாபன், நடராஜ்,கமலேஷ் ஆகிய ஆறுபேரை கைது செய்து சாய்பாபா காலணி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.