December 20, 2018
தண்டோரா குழு
கோவையில் புனித அதிதூதர் பேரலாயத்தில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்மஸ் விழாவில் அனைத்து மத தலைவர்களும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
கோவை பெரியகடை வீதி செயின்ட் மைக்கேல் பள்ளி அருகில் உள்ள புனித அதிதூதர் பேரலாயத்தில் உரோமன் கத்தோலிக்க மறை மாவட்டமும், சி.எஸ்.ஐ. கோவை மறைமாவட்டமும், கோவை பல்நோக்கு சமூக சேவா சங்கமும் இணைந்து சமத்தவ கிறிஸ்மஸ் விழாவினை கொண்டாடியது. இந்த நிகழ்ச்சிக்கு ரோமன் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் எல்.தாமஸ் அக்வினாஸ், தென்னிந்திய திருச்சபை கோவை மண்டல ஆயர் ரெவரண்ட் திமோத்தி ரவீந்தர் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் கத்தோலிக்க கோவை மறைமாவட்ட ஆயர் எல்.தாமஸ் அக்வினாஸ் வாழ்த்துரை வழங்கினார்.
அப்போது அவர் பேசிய அவர்,
உலகில் உள்ள எல்லா சமயங்களும் ஒரே கருத்தைத்தான் ஆழமாக பதிவு செய்கின்றன. நாம் கொண்டாடும் ஒவ்வொரு நிகழ்விலும், ஆன்மீகம் அமைய வேண்டும். இந்த நிகழ்ச்சியில் எல்லா சமயத்தலைவர்களும் வந்து உள்ளதால் இந்த இடமே புனிதமாகிறது. கிறிஸ்துமஸ் என்றால் அன்பு-பகிர்வு வேண்டும். அதனைத்தான் ஆண்டவராக இயேசு கிறிஸ்து 2000 ஆண்டுக்கு முன் தோன்றி நமக்கு போதித்து உள்ளார். எனவே, உலக உயிர்கள் அனைத்திடத்திலும் அன்பு கொள்வோம். நம்மிடம் உள்ள தேவையற்றதை கொடுப்பது உண்மையான பகிர்வு ஆகாது. நம்மிடம் உள்ளதை அப்படியே பிறருக்கு வழங்கி அதில் மகிழ்ச்சி கொள்வதே உண்மையான பகிர்வாகும். நாம் இந்த கிறிஸ்மஸ் விழாவில் அனைவரிடத்திலும் உண்மையான அன்பையும், பகிர்வையும் கொள்வோம் என வாழ்த்துகிறேன் என்று பேசினார்.
கோவை மண்டல தென்னிந்திய திருச்சபையின் ஆயர் ரெவரண்ட் திமோத்தி ரவீந்தர் பேசுகையில்,
உலக மக்கள் அனைவருக்கும் இந்த கிறிஸ்மஸ் விழா புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இங்கே நாம் சமத்துவ கிறிஸ்மஸை கொண்டாடி வருகிறோம். உலக மக்களிடையே உறவுகள் மேம்பட வேண்டும் என ஏசு கிறிஸ்து இராயிரம் ஆண்டுக்கு முன்பாகவே நம்மில் தோன்றி நமக்காக போதித்து சென்று உள்ளார். அதனை புதிப்பிக்கும் வகையில் இந்த கிறிஸ்மஸ் அமைந்து உள்ளது. இங்கே அனைத்து சமய தலைவர்களும் ஒன்று சேர்ந்து அமைந்து உள்ளது பெரும் மகிழ்ச்சியினை தந்து உள்ளது. நம்மிடையே மனங்களில் இருக்கும் தடுப்பு சுவர்களை நாம் தகர்த்து எறிய வேண்டும். அனைத்து சமயத்தாரும் ஒரே சமுதாய மக்கள் என்ற எண்ணத்தை இந்த நந்நாளில் ஏற்று இந்தியா உலகில் பெருமை கொள்ளும் வகையில் நாம் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் கோவை கவுமார மடாலய சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள், கோவை மாவட்ட அனைத்து ஜமாத் தலைவர் பஷீர் அகமது, கோவை குற்றவியல் நீதிபதி திருமதி இனியா கருணாகரன், உள்பட பலர் பேசினர். இந்த நிகழ்ச்சியில் வால்பாறையில் இயற்கையின் இடர்பாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கோவை கத்தோலிக்க மறைமாவட்ட பல்நோக்கு சமூக சேவா சங்கம் சார்பில் ரூ.9 லட்சத்து 38 ஆயிரம் நிதிக்கான காசோலையும், ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக சைக்கிள் மற்றும் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.
விழாவில் மேற்கு மண்டல ஐ.ஜி.பெரிய்யா, வழக்கறிஞர் நந்தக்குமார், அரசு வக்கீல் செல்வராஜ், சுன்னத் ஐமாத் செயலாளர் ஹாஜி இணையத்துல்லா, குருவாத்துவாரா நிர்வாகி இக்பால் சிங் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். கிறிஸ்மஸ் விழாவினையொட்டி குழந்தைகளின் நடனமும், ஹான்சிலா என்பவர் கிறிஸ்வ பாடலும் பாடினார்.