September 2, 2020
தண்டோரா குழு
கோவையில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனியார் கல்லூரி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சில தினங்களுக்கு முன்பு அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் அரியர் தேர்வு எழுதுவதற்கு கட்டணங்கள் செலுத்தி இருந்தால் அனைவரும் தேர்ச்சி என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் பேனர்கள் வைக்கப்பட்டன.
கோவையிலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று கோவை ரயில் நிலையம் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் தனியார் கல்லூரியின் சார்பில்(VLB) முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் நன்றிகளை நிலையான வாக்குகளை அள்ளி தருவோம் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.அதே போன்று வேறு ஒரு போஸ்டரில் மாணவர்களின் ஒளிவிளக்கே மாணவர்களின் கல்விக் கடவுள் என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அதில் பத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் புகைப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.