September 28, 2019
தண்டோரா குழு
மதுக்கரை வனச்சரகத்தித்குட்பட்ட கல் கொத்திபதி மலை கிராமம் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருப்பதால் , வன விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. மலைப்பகுதியை ஒட்டி இருக்கும் தோட்டங்களில், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், சூரிய ஒளி மின்வேலியை பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது. கல் கொத்தி பதி அருகே பட்டிலிங்கம் எனபவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை தங்கவேல் கவுண்டர் (55) என்பவர் குத்தகைக்கு எடுத்து வாழை விவசாயம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்கொத்தி பதி மலை கிராமம் அருகே 10 யானைகளைக் கொண்ட கூட்டம் வந்துள்ளது. இந்த கூட்டம் வாழை தோட்டத்தித்குள் நுழைய முற்படும் போது முதலில் வந்த 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மின்வேலியில் இருந்து மின்சாரம் தாக்கியதில், அதிலேயே சிக்கி உயிரிழந்தது. இதனையடுத்து இன்று காலை மலைவாழ் மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் காருண்யா நகர் காவல் துறையினர் வனத்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், மின்வாரிய அதிகாரிகள் , காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானை இறந்த சம்பவம் அறிந்த தங்கவேல் கவுண்டர் தலைமறைவாகியுள்ளார். மின் இணைப்பு இல்லாத இந்த தோட்டத்தில் , சூரிய ஒளி( சோலார்) மூலம் மின்வேலிக்கு மின்சாரம் கொடுத்திருக்கின்றனர். அப்போது அதிக மின்சாரம் மின்வேலியில் பாய்ந்ததே யானை இறப்பிற்கு காரணம் என மின்வாரியத்தினர் தெரிவித்தனர். வனத்துறையினர் யானைக்கு உடற்கூறாய்வு செய்ய இருக்கின்றனர்
இரண்டு வருடங்களுக்கு முன் இதே வனச்சரகத்திற்கு உட்பட்ட மாதம்பட்டி குப்பனூரில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த சம்பவத்தில் , இதுவரைக்கும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.