October 3, 2020
தண்டோரா குழு
கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தை அடுத்த கே.எஸ்.பி.பம்ப் அருகே மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்றை பாதுகாப்பாக மேட்டுப்பாளையம் சாலையை கடக்க உதவிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்த கே.எஸ்.பி.பம்ப் அருகே நேற்று இரவு 11 மணி அளவில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சுமார் 12 அடி நீளமுள்ள மிகப்பெரிய மலைப் பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து சாலையை கடக்க முற்பட்டது.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையில் நிறுத்தி மலைப்பாம்பு சாலையை கடக்கும் வரை காத்திருந்தனர். ஆனால் அந்த மலைப்பாம்பு இரையை விழுங்கியிருந்ததால் மிகவும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. மலைப்பாம்பு மிகவும் பெரியதாக இருந்ததால் பாம்பின் அருகில் செல்ல அனைவரும் அச்சப்பட்ட நிலையில் இதைப் பார்த்த நபர் ஒருவர் அருகில் இருந்த பெரிய கம்பை எடுத்து அந்த மிகப்பெரிய மலைப்பாம்பு சாலையை கடக்க அதன் அருகில் சென்று உதவியதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
மிகவும் மெதுவாக நகர்ந்த அந்த மலைப்பாம்பு மேட்டுப்பாளையம் சாலையை கடந்து அருகில் இருந்த புதருக்குள் சென்று மறைந்தது. இந்த மலைப்பாம்பு சாலையை கடக்க முயன்றதை யாரும் கவனிக்காமல் இருந்திருந்தால் பஸ், லாரி போன்ற வாகனங்களில் அடிபட்டு இறந்திருக்க கூடும்.மலைப்பாம்பு சாலையை கடக்க முயன்றதால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மிகப்பெரிய மலைப்பாம்பு சாலையை கடக்க உதவிய நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.