February 18, 2019
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் மலக்குழி மரணங்கள் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ள ராஜாமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த ஹரிஹரன் தமிழ்நாடு நகர்புற மேம்பாடு மற்றும் குடிநீர் வடிகால் வாரிய தலைவராக மாற்றப்பட்டார். இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியராக திருச்சி ஆட்சியர் ராஜாமணி நியமிக்கப்பட்டார். இதைதொடர்ந்து இன்று அவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
விரைவில் வெயில் காலம் துவங்க உள்ள நிலையில் குடிநீர் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முன்னாள் ஆட்சியர் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டங்களில் பங்கேற்கவில்லை என விவசாயிகள் தெரிவித்திருந்தது குறித்து கேட்ட போது அனைத்து துறை குறைதீர்ப்பு கூட்டங்களிலும் ஆட்சியர் என்ற முறையில் தான் நிச்சயம் பங்கேற்பேன்.மக்கள் குறைதீர்ப்பு கூட்டங்களில் வழங்கப்படும் மனுக்கள் மீது 15 நாட்களில் தீர்வு வழங்கப்படும் என்றார்.
மேலும், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் மலக்குழி மரணங்கள் அதிகரித்துள்ளது குறித்து கேட்ட போது அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.