January 10, 2021
தண்டோரா குழு
கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் விளம்பர பதாகைகளை அகற்றி அமைச்சரும், மாநகராட்சி அதிகாரிகளும் கூடுதல் விளம்பரம் அளித்துள்ளனர் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
மநீமவின் 5 வது கட்ட பிரச்சாரம் கோவையில் துவங்கியுள்ளது. செல்லும் இடமெல்லாம் மநீமவிற்கு வரவேற்பு கிடைக்கிறது. கோவையில் மநீமவின் விளம்பர பதாகைகளை அகற்றி கூடுதல் விளம்பரம் அளித்துள்ளனர் எனவும், பதாகைகளை அகற்றிய அமைச்சர், மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி எனவும் கூறிய அவர், விளம்பர பதாகைகளை அகற்றுவதில் காட்டும் ஆர்வத்தை மக்கள் பணியில் காட்டியிருந்தால், நாங்கள் அரசியலுக்கு வந்திருக்க மாட்டோம் எனத் தெரிவித்தார்.
தலைவரை வரவேற்க வந்த தொண்டர்கள் பூவை எடுத்து அவர் மீது வீசினர். பூவை வீச வேண்டாம் என அவர் சைகை மூலம் தெரிவித்தும் பூ வை வீசினர். மேலும் பதாகைகளை கமல் சென்றவுடன் விமான நிலையத்திலேயே குப்பையோடு குப்பையாக விட்டு சென்றனர். நம்மவர் விட்டு சென்ற குப்பைகளை விமான நிலைய ஊழியர்கள் உடனே அகற்றி சுத்தம் செய்தனர். அரசியல் இதுவெல்லாம் சகஜமப்பா என்ற கவுண்டமணியின் வசனம் நினைவுக்கு வருகிறது.