June 3, 2020
தண்டோரா குழு
கோவை மதுக்கரை அருகே குரான் பயிலும் மதராசாவில் நுழைந்து மர்ம நபர்கள், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மதுக்கரை அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியில் இஸ்லாமிய குழந்தைகள் குரான் பயிலும் மதராசா செயல்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால் கடந்த 2 மாதங்களாக மதராசா மூடப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று இரவு அப்பள்ளியில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. மேலும் லைட்டுகளும் போடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மதராசாவிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் உள்ளே இருந்த ஃபேன், கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த குரான் புத்தங்களை சேதப்படுத்தி தப்பி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் மதுக்கரை போலீஸாருக்கு தகவல் அளித்தனர். பின் அங்கு வந்த போலீஸார் தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட அனைத்து ஜமாத்தினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது,
மதராசாவில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியது யார் என தெரியாது, இதற்கு எந்த மதச்சாயமும் பூச வேண்டாம், ஆனால் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் இந்த மாதிரியான வழக்குகளில் கோவை மாவட்ட போலீஸார் சிறப்பாக விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே இந்த வழக்கிலும் மர்ம நபர்களை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தனர்.