June 20, 2018 தண்டோரா குழு
கோவையில் போலி ஏ.டி.எம்., கார்டு மூலமாக வங்கி கணக்கிலிருந்து ரூ. 4.31 லட்சம் திருடப்பட்டுள்ளதாகவும், பணத்தை மீட்டுத்தரக்கோரி வங்கி ஊழியர் மீது மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சையது.இவர் கோவை மாநகராட்சியில் சுகாதார துறையில் பணியாற்றி உயிரிழந்தார்.இவருடைய ஓய்வூதியத்தொகையை கடந்த 38வருடமாக இவரது மனைவி உசேன் பீவி பெற்று வந்துள்ளார்.
இவர் வி.எச்.சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கும்,ஓய்வூதியத்தொகை வரவு கணக்கும் வைத்துள்ளார். இந்நிலையில்,கடந்த மே 17 ஆம் தேதி வங்கிக்கு பணம் எடுக்க சென்ற போது,தனது வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுத்து விட்டதாக வங்கி ஊழியர்கள் கூறியதையடுத்து அதிர்ச்சியடைந்த உசேன் பீவி,இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.
தன்னுடைய வங்கி சேமிப்பு கணக்கில் ரூ.4 லட்சத்து 31ஆயிரத்து 300 வைத்திருந்ததாகவும்,அத்துடன் ஓய்வூதியத்தொகையும் இந்த வங்கி கணக்கில் தான் வந்து கொண்டிருப்பதாக கூறியவர்,ஏ.டி.எம். கார்டு வாங்காத நிலையில்,ரூ. 4 லட்சத்து 31ஆயிரத்து 300 பணத்தை போலி ஏ.டி.எம்.கார்டு மூலம் பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வங்கி ஊழியர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் வங்கி சேமிப்பு பணத்தை திருட முடியாது என்பதால் இந்தியன் வங்கி மேலாளர் மீது சந்தேகம் உள்ளதாகவும்,பணத்தை திரும்ப கிடைக்க வழிவகை செய்யும்படி புகார் அளித்ததாக தெரிவித்தார்.
மேலும்,கடந்த ஏப்ரல் மாதம் லைப் சான்றிதழ் பெறுவதற்காக வங்கி புத்தகத்தை கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள தகவல் மையம் அருகே விண்ணப்பம் பூர்த்தி செய்யும் நபரிடம் கொடுத்ததாகவும்,அவரிடம் இரண்டு நாட்கள் வங்கி புத்தகம் இருந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.