February 21, 2019
தண்டோரா குழு
கோவையில் பார்சல் ஊழியரை தாக்கி, 5.75 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், அந்த நிறுவன பெண் ஊழியரின் தகவலின் பேரில் கொள்ளையில் ஈடுபட்ட அவரது கணவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை, மரக்கடை அடுத்த சுக்ரவார்பேட்டை பகுதியிலுள்ள நாவல்குமார் என்பவர் சொந்தமாக ஏர் பார்சல் என்ற கூரியர் சர்வீசை நடத்தி வருகிறார். இவரின், அலுவலகத்தில் இருந்து கோவையை சேர்ந்த 15 தங்க வியாபாரிகளின் 5.75 கிலோ எடையுள்ள தங்க நகைகளை மும்பைக்கு விமான மூலம் அனுப்ப வேண்டியிருந்தது. இந்த தங்கத்தை இருசக்கர வாகனத்தில் கொரியர் சர்வீஸ் ஊழியர் பிரதீவ் சிங் என்பவர் கடந்த 7ஆம் தேதி எடுத்து சென்றார். அப்போது, சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், பிரதீவ் சிங்கை தாக்கி, பார்சலுக்கு எடுத்து சென்ற ரூ. 1 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளை அடித்து சென்றனர். இது தொடர்பாக, கடந்த 12 நாட்களாக தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 5 பேரை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.
இது குறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித் சரண் கூறுகையில்,
“சம்பவம் நடந்த இடத்திலிருந்து பின் நோக்கி 10கி.மீ., தூரமுள்ள பகுதியிலுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளையும், சம்பவம் நடந்த பகுதி உட்பட 3 பகுதிகளில் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொலைப்பேசி அழைப்புகளையும், 100க்கும் மேற்பட்ட சந்தேக எண்களையும் பின்னோக்கி செல்லும் புலன் விசாரணை முறையில் ஆராய்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்துள்ளோம்,” என்கிறார். மேலும், கொரியர் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் மற்றும் அவரது கணவர் உட்பட 5 பேரை பிடித்துள்ளதாகவும், கூடுதலாக சிலர் கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்த சீரநாயகன்பாளையத்தை சேர்ந்த பிரவீனா, நிறுவனத்திலிருந்து தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் அனுப்புவது குறித்து தன் கணவர் தினகரனிடம் சொல்லியுள்ளார். இதனைத் தொடர்ந்து, தினகரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து, மனைவியின் உதவியுடன் கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, ஒரு வாரம் அந்த பகுதியை கண்காணித்து திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.