June 5, 2018 தண்டோரா குழு
கோவையில் பழைய 1000 ரூபாய் நோட்டுக்கள் 60 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை பீளமேடு பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு அறை எடுத்து நாமக்கல்லைச் சேர்ந்த நபர் ஒருவர் தங்கியுள்ளார்.அந்த அறையினுள் சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த இம்ரான் என்பவரது மகளான தஸ்தகீர் என்பவர் நேற்று இரவு தனது நண்பர்கள் நான்கு பேருடன் கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஜெயின் அப்பார்ட்மென்ட் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.இன்னோவா காரில் வந்த அவர்கள் தாங்கள் கொண்டு வந்த தோல் பையை அறையினுள் வைத்துவிட்டு அவர்கள் பேசிய போது அவர் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நான்கு பேரும் வேகமாக அப்பகுதியை விட்டு சென்று விட்டனர்.இதனைத்தொடர்ந்து இன்று காலை வரை அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளரிடம் செல்போனில் பேசி வந்த அந்த நபர்கள் காலை முதல் செல்போனையும் அனைத்து வைத்துள்ளனர்.இதனால் சந்தேகம் அடைந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார் தோல் பையை எடுத்து சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த பையில் கட்டுக்கட்டாக பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் அந்த நோட்டுகளை எண்ணிப் பார்த்ததில் சுமார் 60 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஏற்கனவே கோவையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுமார் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது பழைய 1000 ரூபாய் நோட்டுகள் பிடிபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.