December 15, 2018
-ச.ச.சிவசங்கர்
இன்றைய நாளில் நாம் பாதுகாக்க வேண்டியவர்கள் பழங்குடியினர்கள். மாறிவரும் காலத்திற்கேற்ப நிலம் சார்ந்தும், பண்பாடு சார்ந்தும் அவர்களின் இயல்பு நிலையிலிருந்து விலகி வருவது குறித்து பல ஆய்வுகள் கூறுகிறது. பழங்குடிகளின் ஆதாரமே காடுகள் மலைகள் சார்ந்த வாழ்க்கையும், விவசாயமும் தான். நவீன சமூகத்தில் அவர்களை மேலோட்டமாக பார்த்தால் நகரவாசிகளுக்கு கிடைக்க கூடிய கல்வி அவர்களுக்கு கிடைப்பதில்லை (அதாவது ஒப்பீட்டளவில்), இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு இனக் குழுக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கென்று நீண்ட நெடிய வரலாறும், பாரம்பரியமும் இருக்கிறது, அந்த வகையில் அவர்களின் கலை சார்ந்த செயல்பாடுகள் வியக்கத்தக்கவை, ஓவ்வொரும் கலை செயல்பாடுகளும் அனேக கதைகள் சொல்லும். அதில் சில பழங்குடியினரின் ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அரசின் பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டு சம்மேளனம் சார்பில் இம்மாதம் 5 முதல் 16ம் தேதி வரையில் கோவை கஸ்தூரி சீனிவாசன் கலை மையத்தில் பழங்குடியினர்களின் ஓவியங்கள் கலை சாதனங்கள் கண்காட்சிக்கு வைக்கபட்டிருக்கிறது. ஒவ்வொன்றும் அசரவைக்கும் செயல்பாடுகள்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கோண்ட் பழங்குடியின மக்களின் ஓவியங்களும், ஒரிசாவைச் சேர்ந்த சவோரா பழங்குடியின மக்களின் ஓவியங்கள் மற்றும் வார்லி, பித்தோரா ஆகிய பழங்குடியின மக்களின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும், கையால் வரைந்ததென்று சொன்னால் நம்பவது கடினம் அத்தனை நுனுக்கமான கையாண்டிருக்கிறார்கள்.
இதை பற்றி நிகழ்வின் பொறுப்பாளர் ஜெயஸ்ரீ’யிடம் கேட்டபோது:
இந்த நிகழ்வு பழங்குடிகளுக்கானது, இங்குள்ள பொருட்கள் அனைத்துமே பழங்குடி மக்களால் செய்யப்பட்டது, இது நேரடியாக அரசின் பொறுப்பில் இருப்பதால் போலி பொருட்கள் இருக்காது. இதன் கோவை கிளை வேளான் பல்கலைகழகத்தில் இருப்பதால் பெரியளவிற்கு தெரிவதில்லை, இதுபோல் பொது இடத்தில் காட்சி படுத்துவதால் அதிகம் மக்கள் வருகிறார்கள் உள்ளபடி மக்களிடம் நல்ல வரவேற்ப்பும் கிடைத்துள்ளது, என்கிறார்.
பார்வையாளர் கோபியிடம் கேட்டபோது:
பொதுவாகவே எனக்கு கலை மீது அதிக ஈடுபாடு உண்டு, இங்கு ஒவ்வொரு பொருட்களும் அழகாக இருக்கிறது, அவர்களின் கலை செயல்பாடுகள் வியக்க வைக்கிறது, குறிப்பாக ஓவியங்கள் அத்தனை வசீகரமாக உள்ளது, பல்வேறு ஓவியங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கு இருக்கும் ஓவியங்கள் சற்று வித்தியாசமாக உள்ளது. இப்படியான ஓவியங்களை பார்க்கும் போது மனதுக்கு நெருக்கமாக உணருகிறேன்.