February 21, 2019
தண்டோரா குழு
கோவையில் பறை இசை முழங்க உலக தாய்மொழி தின பேரணியில் ஆயிரகணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.
உலகம் முழுவதும் பிப்ரவரி 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடபட்டு வருகிறது. 1925ம் ஆண்டு அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்கதேச மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்ககோரி நடத்தபட்ட போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறும் நாளாக கொண்டாடபட்டு வருகிறது. 1999ம் ஆண்டு யுனெஸ்கோ சார்பில் நடந்த பொது மாநாட்டின் 30வது அமர்வில் அனைத்து உலக தாய்மொழி தினமாக அறிவிக்கபட்டது.
இதனையொட்டி 2000ம் ஆண்டு முதல் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி நாளாக உலகின் பல பகுதிகளில் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தொன்மை வாய்ந்த மொழிகளில் ஒன்றான தமிழ்மொழியை கொண்டாடி வருகின்றனர். தஞ்சாவூர் தமிழ்பல்கலைகழக துனைவேந்தர் சி.சுப்ரமணியம் தலைமையில் 2006ம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ் இலக்கிய பண்பாட்டு கழகங்களின் கூட்டமைப்புகளோடு இணைந்து பேரணி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவையில் இன்றைய தினம் 21ம் ஆண்டு உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளை சேர்ந்த மூவாயிரதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் பெண்கள் தொழில்நுட்ப கல்லூரியில் இருந்து வ.ஊ.சி மைதானம் வரை பேரணியாக சென்றனர்.
பேரணியை சிரவை ஆதீனம் இராமனந்த குமரகுருபர அடிகளார் துவக்கி வைத்தார்.பறை இசை முழங்க துவங்கிய இந்த பேரணியில் வாழிய வாழிய வாழியவே எங்கள் தமிழ்மொழி வாழியவே மொழிகளில் தொன்மையான மொழி தமிழ் மொழியே என்ற முழக்கங்கள் எழுப்பியபடியே ஊர்வலமாக சென்றனர்.இந்த பேரணியில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்,கூலவாணிகர் இராமசாமி,புலவர் அப்பாவு,கனகசுப்ரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.