February 13, 2019
தண்டோரா குழு
கோவையில் பட்டத்தரசியம்மன் கோவிலில் ஐம்பொன் சிலை மற்றும் உண்டியல் பணம் திருடப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றிரவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஒன்றரை அடி உயரமுள்ள ஐம்பொன் சிலையை திருடியுள்ளனர். மேலும் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் எடுத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலையில் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த பொதுமக்கள், காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் பந்தயசாலை காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் திருடர்களை தேடி வருகின்றனர். திருடப்பட்ட சிலையின் மதிப்பு பல இலட்ச ரூபாய் இருக்குமென கூறப்படுகிறது.