September 30, 2019
தண்டோரா குழு
கோவையில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டிப்பது, நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழக காங்கிரஸ் கட்சியில், தற்போது ஆண்டுக்கு ஒரு முறை, பொதுக்குழு கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டு அதன்படி, கோவை, காளப்பட்டி சாலை, சுகுணா ஆடிட்டோரியத்தில், சிறப்பு பொதுக்குழு கூட்டம்,இன்று காலை துவங்கியது. தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி, கட்சிக் கொடியேற்றி வைத்து, தொண்டர்களின் அணிவகுப்பை ஏற்று பின்னர் பொதுக்குழுவை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். செயல் தலைவர், மயூரா ஜெயகுமார் வரவேற்று பேசினார் இதில் செயல் தலைவர், மோகன்குமாரமங்கலம் அறிமுகவுரை ஆற்றினார்.நிகழ்ச்சியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு,மூத்த தலைவர் குமரி அனந்தன்,பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்கும்பொதுக்குழு உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள், வட்டார தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் என அனைவருக்கும், அடையாள அட்டை வழங்கி, அமர வைக்கப்பட்டுள்ளனர். பொதுக்குழுவில் தீர்மானங்களாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைதை வன்மையாக கண்டிப்பது,நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது,காஷ்மீரில் தற்போது நடைபெற்றச் சம்பவத்தை கண்டிப்பது உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும்,காஷ்மீரில் நடந்தது மற்றும் நடப்பது என்ன?, தலித்துகள் சிறுபான்மையினர்க்கு எதிரான தாக்குதல்கள், மதச்சார்பின்மை ஏன் எதற்காக, மன்மோகன் சிங் ஆட்சி மோடி ஆட்சி ஓர் ஒப்பீடு, பாஜக ஆட்சியில் பழிவாங்கும் போக்கு, என்பன உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நடக்கும் கருத்தரங்கத்தில்,முன்னாள் மத்திய அமைச்சர், சுதர்சன் நாச்சியப்பன், கோபண்ணா, செல்வப் பெருந்தகை, பொன்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பேசுகின்றனர்.