May 28, 2018 தண்டோரா குழு
கோவை அருகே தொழில் அதிபர் வீட்டில் 60 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கோவில்பாளையம் கவையகாளியம்மன் வீதியை சேர்ந்தவர் ரூபன். தொழில் அதிபரான இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஞாயிறன்று இரவு தனது குடும்பத்துடன் சினிமாவிற்கு கோவை நகரத்திற்கு சென்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 60 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சம் ரூபாய் கொள்ளை போனதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து,கோவில்பாளையம் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் தடய அறிவியல் துறையினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு பதிவான கை ரேகையை கொண்டு பழைய கொள்ளையர்கள் யாராவது இச்செயலில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.