March 20, 2019 தண்டோரா குழு
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி கோவையில் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி, அனைவரும் வாக்களிக்க வேண்டும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும், அசௌகரியம் இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் உள்ளிட்ட வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பதாகைகள் கட்டப்பட்ட இரு சக்கர வாகனம் ரேஸ் கோர்ஸ், சுங்கம் என நகரின் முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.
முன்னதாக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் இராசாமணி துவக்கி வைத்தார். இந்த பேரணியில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். நேற்றைய தினம் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசார வாகனம் கோவையில் துவங்கப்பட்டது. பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், மால்கள், பள்ளிகள், கல்லூரிகள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நகரில் பிரசார வாகனம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.