March 16, 2019 தண்டோரா குழு
கோவையில் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கோரி இளம் பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை பொள்ளாச்சி பகுதியில் 100க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் அளித்தாக சதீஸ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சபரிராஜன் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர். பின் இவ்வழக்கின் முக்கியத்துவம் கருதி சிபிசிஐடி இடம் மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அதேசமயம் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி விவகாரத்தின் எதிரொலியாக துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக் கேட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பள்ளி மாணவி ஒருவரும், கல்லூரி மாணவி ஒருவரும் மனு அளித்தனர்.
அதில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை செய்தித்தாள்கள் வழியாகவும் சமூக வலைத்தளங்கள் வழியாகவும் அறிந்து வருகிறோம். இக்காலகட்டங்களில் பெண்களான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. நாள்தோறும் ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகள் அதிகப்படியாக உள்ளது. இதனால் சுயமாக எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கி வைத்திருக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
தமிழீழம், ஓவியா என்ற இவர்கள் இருவரும் சகோதிரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.