March 22, 2019 தண்டோரா குழு
கோவையில் தனியார் ஆம்னி பேருந்தில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 150 கிலோ குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவையில் உள்ள நவ இந்தியா பகுதியில் அமைந்து உள்ள ஆம்னி பேருந்து நிறுத்தும் இடத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து கோவை வந்த தனியார் ஆம்னி பேருந்தின் மேற்கூரையில் காய்கறிகளுடன், குட்கா பொருட்கள் மறைத்து எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. இதனால் உடனடியாக அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது குட்காவை கொண்டு வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
150 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. ஏற்கனவே இந்த பேருந்தில் கடந்த டிசம்பர் மாதம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த நிலையில், தற்போது மீண்டும் அதே பேருந்தில் குட்கா பறிமுதல் செய்து உள்ளதால், அந்த பேருந்தின் ஓட்டுனரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.