July 2, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான தெலுங்குபாளையம், செல்வபுரம் ஹவுசிங்யூனிட், காந்திபார்க் தெலுங்குவீதி, ஐயப்பாநகர் செட்டிவீதி, ஆகிய பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணிநேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில், கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வெளிமாநிலங்கள், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் மற்றும் இரயில்கள் மூலம் கோவை மாவட்டத்திற்குள் வருகை புரிந்தவர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. தற்போது இரயில், விமானச் சேவைகள் இல்லாத நிலையில் வெளியிலிருந்து கோவை மாவட்டத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
மேலும்,ஏற்கனவே வந்தவர்களுக்கு அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் குடும்பத்தினர், அருகில் வசிப்போர், தொடர்பில் இருந்த நபர்கள் ஆகியோருக்கு தொடர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் 9 இடங்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் கோயம்புத்தூர் மாநகரப்பகுதிகளான
தெலுங்குபாளையம், செல்வபுரம் ஹவுசிங்யூனிட், காந்திபார்க் தெலுங்குவீதி, ஐயப்பாநகர் செட்டிவீதி, ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இன்று நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் , அப்பகுதிகளை தொடர்ந்து கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருக்கவும், அப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கும் மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உறுதி செய்திட உத்தரவிட்டதுடன், இப்பகுதிகளில் தினமும் கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்யவும் உத்தரவிட்டார்.
மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்களை தொடர்ந்து கண்காணித்திட வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கேட்டுக்கொண்டார்.இந்த ஆய்வின் போது மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார், மாநகராட்சி நகர் நல அலுவலர் ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.