April 3, 2019 தண்டோரா குழு
கோவை அருகே வனப்பகுதியில் நிலவும் வறட்சியினால் தண்ணீர் தேடி யானைகள் கூட்டங் கூட்டமாக அலைந்து வருகின்றன.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் இரவு நேரங்களில் அதிகளவில் வருவது வழக்கம். தற்போது வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் தண்ணீர் வனவிலங்குகளுக்கு கிடைப்பதில்லை. இதனால் யானைகள் தண்ணீருக்காக கிராமங்களுக்கு வருவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை ஆனைக்கட்டி பகுதியில் தாகம் தீர்க்க தண்ணீர் தேடி யானைகள் கூட்டங்கூட்டமாக வந்துள்ளன. குட்டி உள்ளிட்ட 9 யானைகள் கூட்டமாக கங்கா சேம்பர் என்ற இடத்திற்கு வந்து, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீரை குடித்து சென்றன. இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் எடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பாததே யானைகள் வருவதற்கு காரணமெனவும், போதியளவு தண்ணீரை தொட்டிகளில் நிரப்ப வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.