• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் மற்றும் துணைக்கருவிகளின் சர்வதேச கண்காட்சி

June 17, 2022 தண்டோரா குழு

1933ம் ஆண்டு இந்தியாவின் முதல் நிதியமைச்சர், சர்.ஆர்.கே.சண்முகம் செட்டி அவர்களால் கோவையில் துவங்கப்பட்ட தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா), அனைத்து ஜவுளிப் பிரிவுகளையும் உள்ளடக்கி செயல்படுகிறது. சைமா கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் “டெக்ஸ்ஃபேர்” என்ற பெயரில் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் சர்வதேச கண்காட்சியை நடத்திவருகின்றது.

ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்தியாளர்கள் ஃ விநியோகஸ்தர்கள் மற்றும் அதன் உபயோகிப்பாளர்களான ஜவுளி ஆலைகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பரஸ்பரம் பயன் அடைய செய்வதே இந்த கண்காட்சியின் நோக்கமாகும். இதற்கு முன்பு நடைபெற்ற “டெக்ஸ்ஃபேர்” கண்காட்சிகளில் பங்கேற்றவர்கள் பயன் அடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பதிமூன்றாவது கண்காட்சி வருகின்ற ஜூன் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை கோவை கொடீசியா கண்காட்சி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். உலகில் நடத்தப்படும் பல்வேறு ஜவுளி இயந்திரங்களின் கண்காட்சிகளில் “டெக்ஸ்ஃபேர்” கண்காட்சி தரம் வாய்ந்ததாக மதிப்பிடப்படுகிறது.

மேலும், பல்வேறு நாடுகளில் இருந்து ஜவுளி இயந்திர உற்பத்தியாளர்கள், உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குவோர் ஆகியோர் கண்காட்சியில் பங்கேற்கிறார்கள். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாநகரம், நாட்டின் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்தியில் 70 சதவீதத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. உலகளவில் கோவை ஜவுளித் தொழில் உற்பத்தி மையமாக திகழ்வதால், “டெக்ஸ்ஃபேர்”கண்காட்சியில் பங்கேற்பவர்களுக்கு நல்ல வியாபாரம் கிடைக்கும்.

இது குறித்து இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சைமாவின் தலைவர் ரவி சாம் மற்றும் துணைத் தலைவர், டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன் ஆகியோர் இந்த நிகழ்வுகள் குறித்து விளக்கினர். அவர்கள் குறிப்பிடும் போது 220 ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் 295 ஸ்டால்களில் தங்கள் பொருட்களை கண்காட்சியில் வைக்க உள்ளார்கள் என்று கூறினர்.

தமிழகத்தைத் தவிர, குஜராத், மராட்டியம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம், உத்தரகாண்ட், கர்நாடகா, டாமன் ரூ டையூ மற்றும் கோவா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஜவுளி இயந்திர, உதிரிபாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் தங்கள் பொருட்களை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்த உள்ளார்கள். இது தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கமான சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளையும் மற்றும் ஜப்பான், சீன நாடுகளையும் சேர்ந்த ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கு பெற உள்ளனர்.

சைமா தலைவர்கள் மேலும் கூறுகையில்,

ஜவுளி ஆலைகள் ஒவ்வொரு வருடமும் ஆண்டு மொத்த விற்பனையில் 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை உதிரிபாகங்கள் வாங்குவதற்கும், நான்கு சதவீதம் முதல் ஆறு சதவீதம் வரை ஜவுளி இயந்திரங்களை புதுப்பிப்பதற்கும் செலவிடுகிறார்கள்.அவ்வாறு வாங்கும் பொருட்களை தீர்மானிப்பதற்கும், புது இயந்திரங்கள் வாங்க முடிவு செய்வதற்கும் இந்த கண்காட்சி சரியான இடமாக அமையும் என்றும் அவர்கள் கூறினர்.

இறக்குமதி பொருட்களுக்கு மாற்றாக உள்நாட்டிலேயே குறைந்த விலையில் இயந்திரங்களையும் உதிரிபாகங்களையும் உற்பத்தி செய்வோரை ஊக்குவிப்பதும்; இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும். ஜவுளித்துறை சம்மந்தப்பட்ட அனைவரும்; இந்த கண்காட்சியில் கூடுவதால் ஜவுளித்தொழிலின் பல்வேறு பிரிவகளின் உரிமையாளர்களும் பணியாளர்களும் இந்த கண்காட்சிக்கு விஜயம் செய்து பயனடைய சைமா தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். நாடு முழுவதுமிருந்து ஒரு இலட்சம் பேர் இந்த கண்காட்சியை பார்வையிடுவர் என்று எதிர்பார்ப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மேலும், அவர்கள் கூறுகையில், இந்த கண்காட்சியின் மூலம் ரூ.1,500 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தனர். மேலும், சைமா தலைவர்கள் தெரிவிக்கையில், கண்காட்சியின் துவக்க விழா வருகின்ற ஜூன் 24ஆம் தேதி கோவை கொடீசியா கண்காட்சி வளாகத்தில் பிற்பகல் 3.45 மணிக்கு நடைபெற உள்ளதாகவும் அது சமயம் மத்திய ஜவுளித்துறை அமைச்சர்,பியுஷ் கோயல் கண்காட்சியை திறக்க இசைவு தெரிவித்துள்ளதாகவும் கூறினர்.

மேலும், மாண்புமிகு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர், டாக்டர் எல்.முருகன் அவர்கள் விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார். மேலும், நிகழ்ச்சியில் ஜவுளித் தொழில் சார்ந்த பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கவுள்ளார்கள்.மேலும், அவர்கள் கூறுகையில், ஜூன் 26ஆம் தேதியன்று பிற்பகல் 3.30 மணியளவில் கண்காட்சி நிறைவு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டுள்ளது என்றும், அது சமயம் தமிழக அரசிலிருந்து மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர், சைமா தலைவர்கள் இருவரும் இணைந்து டெக்ஸ்ஃபேர் கண்காட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (www.simatexfair.org ) துவக்கி வைத்தனர்.

இந்த இணையதளம் கண்காட்சியில் பங்கேற்போருக்கும் கண்காட்சியினை பார்வையிட வருகை தருவோருக்கும் பயனடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க