May 2, 2026
தண்டோரா குழு
கோவையில் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “சி.எஸ்.ஐ. எஜூ கனெக்ட் 2026” என்ற மெகா கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆல் சோல்ஸ் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்க விழாவில், கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும்,ஊட்டி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி இயக்குநருமான அருமை ராஜ் வரவேற்புரை வழங்கினார்.
தலைமை உரையாற்றிய சி.எஸ்.ஐ. கோவை திருமண்டல பேராயர் பிரின்ஸ் கால்வின், கல்விச் சேவையில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றதை பெருமையுடன் நினைவுகூர்ந்தார்.
மாணவர்களின் உயர்கல்வி தேர்வுகளுக்கு வழிகாட்டும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மறைமாவட்டத்தின் கீழ் செயல்படும் சி.எஸ்.ஐ கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு கல்லூரிகள் பங்கேற்றன.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பிரபல கல்வி வழிகாட்டியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசுகையில்,
தற்போதைய மாணவர்கள் கணினி துறையில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக குறிப்பிட்டார்.அதே நேரத்தில், பிற துறைகளிலும் வேலைவாய்ப்புகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், மாணவர்கள் பல்வேறு துறைகளை ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் சி.எஸ்.ஐ. கோவை திருமண்டல உப தலைவர் ஆயர் டேவிட் பர்னபாஸ்,பொருளாளர் அமிர்தம் உள்ளிட்ட ஆயர்கள்,திருமண்டல நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கல்வி மற்றும் தொழில் வழிகாட்டி அரங்குகளை விருந்தினர்கள் பார்வையிட்டனர்.
மாணவர்களின் எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக பங்கேற்றனர்.