March 26, 2019 தண்டோரா குழு
கோவையில் ஆறு வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.
கோவை பன்னிமடை பகுதியில் உள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்த, பிரதீப் வனிதா தம்பதியினரின் குழந்தை வெளியே விளையாடிக் கொண்டு இருந்த போது காணாமல் போனது. பிறகு காவல் துறையினர், பொதுமக்கள் , உறவினர்கள் என தேடி வந்த நிலையில் அதிகாலையில் சிறுமியின் உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். பிறகு காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிறுமியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கூடிய பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த, வேட்பாளர் சி பி ஆர் ராதாக்ருஷ்ணன் , மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உறவினர்கள் , பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனிடையே அரசியல் கட்சியினர் இந்த விவகாரத்தில் தலையிடக் கூடாது என கூறி, மாதர் சங்கத்தினர் உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல் துறையினர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர்.