March 8, 2019
தண்டோரா குழு
பக்தர்களுக்கு வாக்கு சொல்லும் போது 20 அடி மரத்தில் இருந்து தவறி விழுந்த கோவில் பூசாரி பரிதாபமாக இறந்தார்.தற்போது பூசாரி தவறி விழும் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
கோவை பேரூர் அடுத்த சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள ஊர் பொது கோயிலான ஐயா சாமி திருக்கோயில் மிகவும் பழமையானதாகும். இக்கோயிலில் அம்மாவாசை பௌர்ணமி நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இக்கோயிலில் ஐயாசாமி என்பவர் பூஜை செய்து வந்தார். ஆண்டு தோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு வருடந்தோறும் இரவு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அப்போது நள்ளிரவில் அக்கோயிலுக்கு வந்துள்ள பக்தர்களுக்கு கோவில் மைதானத்தில் அமைக்கப்பட்ட 20 அடி பூஜை செய்த மரத்தின் மீது அமர்ந்து கொண்டு பக்தர்களுக்கு குறி சொல்வது வழக்கம், அதே போல இந்த ஆண்டும் நிகழ்ச்சி நடைபெற்ற போது பூஜை செய்யப்பட்ட மரத்தின் மீது ஏறி படுத்துக்கொண்டு ஆக்ரோஷமாக பக்தர்களுக்கு குறி சொல்லிக் கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி 20அடி கம்பத்திலிருந்து விழுந்த பூசாரி அய்யாசாமி படுகாயமடைந்தார். உடனே பக்தர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குறி சொல்லிக் கொண்டிருந்த பூசாரி தவறி விழுந்து இருந்ததால் அப்பகுதியில் அங்குள்ள மக்கள் சோகத்தில் உள்ளனர். இதனிடையே பூசாரி மரத்தில் இருந்து தவறி விழும் வீடியோ காட்சி அப்பகுதியில் வைரலாக பரவி வருகிறது.