December 18, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டம் வரப்பாளையம், பெரிய தடாகம் உட்பட பல்வேறு கிராம பகுதிகளில் இரண்டு காட்டு யானைகள் தொடர்ச்சியாக சுற்றிவந்தன. இரு காட்டு யானைகளை சின்னத்தம்பி, விநாயகன் என்று பெயரிட்டு கிராம மக்கள் அழைத்து வந்தனர். தனித்தனியாக சுற்றி திரியும் இந்த இரு காட்டு யானைகளும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த்தால் இந்த இரு யானைகளையும் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இருகாட்டு யானைகளையும் பிடித்து முதுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விட கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கடந்த மாதம் உத்தரவிட்டார். யானையை பிடிக்க ஆட்சியர் உத்திரவிட்டும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் நேற்றைய தினம் சென்னையில் உள்ள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தை கோவை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு காட்டு யானைகளையும் உடனடியாக பிடிக்கும்படி வனத்துறையினருக்கு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று அதிகாலை 5.30 மணி அளவில் விநாயகன் என்ற காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியினை வனத்துறையினர் துவங்கினர். அப்போது, பெரிய தடாகம் அருகில் மலை அடிவாரத்தில் இருந்த விநாயகன் என்ற காட்டு யானைக்கு வனத்துறை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தினர். இதனையடுத்து காட்டு யானை மயக்கமடைந்தது.
பின்னர் வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையில் 4 மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் இந்த காட்டு யானையை கண்காணித்து வந்தனர்.
இதையடுத்து மயக்கம் அடைந்த காட்டு யானையை கும்கி யானைகள் உதவியுடன் பிடித்த வனத்துறையினர் லாரியில் ஏற்றி முதுமலைக்கு இன்று அனுப்பி வைக்கவுள்ளனர்.
மேலும், சின்னதம்பி என்ற யானை கண்காணிக்கப்பட்டு வருகின்றது. சமதள பரப்பில் சின்னதம்பி யானை வரும் போது அதையும் பிடித்து முதுமலை கொண்டு செல்லப்படும் என்றும் கோவை மண்டல முதன்மை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீ வஸ்த்தவா தெரிவித்துள்ளார்.