June 18, 2020
தண்டோரா குழு
கோவையில் காரில் கஞ்சா கடத்திய முன்னாள் அதிமுக பெண் நிர்வாகியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை வடவள்ளி அருகே காரில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் வடவள்ளி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த காரை போலீசார் சோதனையிட்டனர். அதில் நான்கு கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
மேலும் அந்த காரில் தென்மண்டல சிஐடி அதிகாரி அடையாள அட்டை போலி வருமான வரி அதிகாரி என போலியான அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் காரில் கடத்தப்பட்ட 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காரில் வந்த திருப்பூர் அவிநாசியைச் சேர்ந்த ஜெயமணி என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஜெயமணி கடந்த 2012ஆம் ஆண்டுக்கு முன் அதிமுகவில் மாவட்ட மகளிர் அணியில் நிர்வாகியாக பணியாற்றியவர் என்பதும், பிறகு அதிமுகவில் இருந்து பிரிந்து அமுமுக வில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.