September 16, 2020
தண்டோரா குழு
காரில் அமர்ந்திருந்த நபரை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கிவிட்டு அவரிடம் இருந்த இரண்டு லட்ச ரூபாயை பிடுங்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் டாடாபாத் 9 வது வீதியை சேர்ந்தவர் ஜோய்.இன்டீரியர் டெக்கரேசன் தொழில் செய்து வருபவர். இவர் கடந்த 14 ம் தேதி இரவு ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனது நண்பரிடம் 2 லட்ச ரூபாய் பணம் வாங்குவதற்காக வந்துள்ளார். பணத்தை வாங்கி விட்டு காரில் அமர்ந்த படி நண்பரிடமும் அவரது மனைவியிடமும் பேசிக்கொண்டு இருந்தார்.
இந்நிலையில், திடீரென கையில் கத்தியுடன் வந்த இளைஞர் ஒருவர், ஜோயை கடுமையாக தாக்கினார். இதில் நிலை குலைந்த ஜோய் , காரின் மற்றொரு பகுதியில் உள்ள கதவை திறந்து கீழே விழுந்தார்.அப்போதும் விடாமல் வந்த அந்த நபர் ஜோயை கத்தியால் உடலின் பல பகுதிகளில் குத்தியுள்ளார்.இதில் பலத்த காயம் அடைந்த ஜோய் அலறியதை கேட்டு , பொது மக்கள் ஒன்று கூடினர்.
இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் தயாராக இருந்த நபருடன் மர்மநபர் ஒடினார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஜோய் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.