March 26, 2019 தண்டோரா குழு
கோவை அருகே காணாமல் போன 5 வயது பள்ளி சிறுமி கைகளால் கட்டப்பட்ட நிலையில், உடலில் இரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியில் கனபிரதீப் மற்றும் வனிதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வரும் இவர்களுக்கு, 5 மற்றும் 7 வயதில் 2 பெண்குழந்தைகள் உள்ளனர். இதில் 5 வயது பெண்குழந்தை அருகில் உள்ள திப்பனூர் அரசுப்பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த குழந்தை வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்துள்ளது. மாலை 6 மணியளவில் குழந்தை காணாததைக் கண்டு பெற்றோர் அக்கம் பக்கம் தேடியுள்ளனர். தேடியும் கிடைக்காததைத் தொடர்ந்து தடாகம் போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலிசார் இரவு 2 மணி வரை தேடியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் காணாமல் போன குழந்தையில் வீட்டருகே உள்ள ஒரு வீட்டின் அருகே உள்ள சிறிய சந்தில் முகத்தில் டிசர்ட் சுற்றப்பட்டடு, கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து பார்த்தபோது முகம் மற்றும் உடல் முழுவதும் காயங்களுடன் குழந்தை இறந்த நிலையில் இருந்தது. இதையடுத்து உடற்கூறு பரிச்சோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் டி எஸ் பி மற்றும் தடய அறிவியல் துறையினர் குழைந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென உறவினர்கள் தெரிவித்தனர். 5 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அபகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.