February 11, 2020
கோவையில் களை கட்டிய நிலாச்சோறு திருவிழா… ஒற்றுமையை வலியுறுத்தி கும்மியடித்து இரவு முழுவதும் பெண்கள் பாடி மகிழ்ந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் தைப்பூசத்தை முன்னிட்டு நிலாச்சோறு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை ஆவராம்பாளையம் துரைசாமி லே அவுட் பகுதியை சேர்ந்த பெண்கள் தமிழ் பண்பாட்டு கலாச்சார மையம் எனும் அமைப்பை உருவாக்கி ,தமிழர் பாரம்பரிய பண்டிகைகளை பழமை மாறாமல் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தைப்பூசத்துக்கு 7 நாட்கள் முன்பாகவே நிலவுக்கு மரியாதை செய்யும் வகையில் நிலாச்சோறு விழாவை அப்பகுதி பெண்கள் ஒன்று கூடி கும்மியடித்து தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை பங்கிட்டு உண்டு மகிழ்ந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற மன மகிழ் கும்மி விழா என நடைபெற்ற நிலாச்சோறு நிறைவு திருவிழாவில், ஆவராம்பாளையம் துரைசாமி லே அவுட் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றுகூடி நிலாச்சோறு திருவிழாவை நடத்தினர். மேலும், விடிய விடிய கும்மியடித்து ஆடி பாடி மகிழ்ந்தனர்.இதில் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில்,
இந்த திருவிழா பாரம்பரியமாக கிராமப்பகுதிகளில் கொண்டாடப்பட்டு வந்த நிலையில்,தற்போது நகர் புறங்களில் இளைய தலைமுறை குழந்தைகள் நமது தமிழர் பாரம்பரிய விழாக்களை அறிந்து கொள்ளும் விதமாக இதனை இங்கு கொண்டாடுவதாக தெரிவித்தனர். மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் விவசாயம் செழிக்கும், மும்மாரி மழை பெய்யும் என்பது ஐதீகம். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி ஒற்றுமையை வலியுறுத்தி இந்த பகுதியில் உள்ள அனைவரும் இணைந்து இந்த நிலாச்சோறு விழாவை நடத்துவதாகவும் தெரிவித்தனர்.