October 26, 2020
தண்டோரா குழு
கோவையில் கல்லூரி மாணவர் தலையில் தீ கரகம் ஏந்தியபடி ஒற்றை காலில் தொடர்ந்து ஒரு மணி நேரம் ஏக பாதாசன நிலையில் பறையிசைத்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கரூர்,மாவட்டம், லாலாபேட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் கார்த்திக்..பி.காம் இளநிலை இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவர் கிராமிய கலைகளின் மீதுள்ள ஆர்வத்தால் கிராமிய புதல்வன் அகாடமியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டுப்புற கலைகளை கற்று வருகிறார்.இந்நிலையில் இவர் தனது குரு கலைசேவகர் டாக்டர் கலையரசனின் வழிகாட்டுதல் படி விநோத உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.இதில் இவர் தலையில் தீ கரகம் ஏந்தியபடி சுமார் ஒரு மணி நேரம் ஒற்றைகாலில் நின்றபடி ஏகபாதாசனம் நிலையில் பறையிசைத்து இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சாதனை மாணவர் கார்த்திக்,
தனது சொந்த ஊரில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி இந்த நாட்டுபுற கலைகளை கற்று வருவதாகவும், கிராமிய கலைகளை இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த சாதனையை தாம் செய்வதாக தெரிவித்தார். முன்னதாக இந்த சாதனை நிகழ்வை உளியின் உருவம் அறக்கட்டளையின் இணை நிறுவனர் ப்ரீத்தி பாலு மற்றும் அண்மையில் கிராமிய கலைக்கென ஐ.நா விருது பெற்ற கலையரசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.